இந்தியாவில் மீண்டும் சில கோவிட்-19 வைரஸ் மாறுபாடுகள் தோன்றியுள்ளன என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. தற்போதைய மாறுபாடுகள் பெரும்பாலும் லேசான அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்துகின்றன என்றும், அவை பெரும்பாலும் கவலையளிக்கத் தேவையில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்தியாவில் தற்போது ஓமிக்ரான் வேரியன்ட் சார்ந்த நான்கு துணை வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: LF.7, XFG, JN.1 மற்றும் NB.1.8.1. பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட வேண்டிய அவசியம் இல்லையெனினும், நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் பிற உடல் நிலை குறைபாடுகள் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என ICMR கேட்டுக்கொண்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) ஓமிக்ரானின் LF.7 மற்றும் NB.1.8 வகைகளை தற்போது கண்காணிப்பில் உள்ள முக்கிய மாற்றங்களாக வகைப்படுத்தியுள்ளது.
ICMR இயக்குநர் கூறியது என்ன?
ICMR இயக்குநர் ஜெனரல் டாக்டர் ராஜீவ் பாஹ்ல் ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “நாட்டில் தற்போது பரவிவரும் கோவிட் வகைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது கண்டறியப்பட்ட நான்கு வகைகள் கூடுதல் ஆராய்ச்சி மற்றும் மாதிரி சேகரிப்பின் கீழ் உள்ளன,” எனத் தெரிவித்தார். இந்திய அரசாங்கம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
தடுப்பூசி தேவை குறித்த தகவல்: புதிய வகை தோன்றும் சந்தர்ப்பத்தில், தற்போது உள்ள தடுப்பூசிகள் போதுமானதா என்பதை மதிப்பீடு செய்யும் ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளது. தேவையானபட்சத்தில், புதிய வகைக்கு ஏற்றதாக ஒரு புதிய தடுப்பூசி உருவாக்கப்படும் என டாக்டர் ராஜீவ் பாஹ்ல் தெரிவித்தார்.